‘இப்ப தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு’... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி...!
தற்போது பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் மகளிர் நலன் காக்கும் வகையிலும், அவர்கள் மனம் குளிரும் விதத்திலும் பல்வேறு அறிவிப்புகளை அடுத்தடுத்து பிறப்பித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் காவலர்கள் மனம் குளிரும் வண்ணம் கடந்த வாரம் ஒரு அசத்தல் அறிவிப்பை தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டிருந்தார். பெண் காவல் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் முதல்வரின் பயணங்களின் போது சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் சாலையோரத்தில் நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது ஸ்டிரிக்ட் உத்தரவு போட்டார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி டிஜிபி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை பாராட்டியும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் திரையுலகினர் பலரும் தங்களுடைய சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சாலையில் பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்புப் பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.