நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை... உடல் நிலை குறித்து சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு தகவல்...!
விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் விவேக் நேற்று அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் தொற்று வரும் ஆனால் உயிரிழப்புகளை தடுக்கும் என்பதால் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அவருடைய மனைவியும், மகளும் அழைத்து வரும் போதே மயக்கமாக இருந்ததாகவும், நாடித்துடிப்பு குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக்கை இருதய நோய் நிபுணர்கள் கண்காணித்து வந்தனர்.
நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவியதை அடுத்து திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர். வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே விவேக்கிற்கு கடுமையான மூச்சுத்திணறல் இருந்தது. எனவே ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு எக்மோ கருவிகளை பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்குவதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் விவேக் உடல் நிலை குறித்து மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை விவேக் வீட்டில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் என்றும் நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.