இந்த விளையாட்டுக்கு நான் வரல.. சுந்தர் சி படத்திற்கு புது சிக்கல் - பொங்கல் ரேஸில் இருந்து விலகியதா அரண்மனை 4?
Aranmanai 4 Movie : பிரபல இயக்குனர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் சுந்தர் சி.
கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் கவுண்டமணி நடிப்பில் வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிவர் தான் சுந்தர் சி. அதனை தொடர்ந்து "முறை மாப்பிளை", "உள்ளத்தை அள்ளித்தா", "மேட்டுக்குடி", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "அருணாச்சலம்", மற்றும் "நாம் இருவர் நமக்கு இருவர்" என்று பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த ஒரு முன்னணி இயக்குனர் அவர்.
தொடக்க காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் நடிகராக வளம்வந்து கொண்டிருக்கிறார் என்று பொழுதும், கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான "தலைநகரம்" என்கின்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக களம் இறங்கி வெற்றி கண்டார். அவ்வப்பொழுது பிறருடைய இயக்கத்திலும் நடித்து வரும் சுந்தர் சி, தான் இயக்கும் திரைப்படத்திலும் அவரே நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான அரண்மனை என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தார். இந்நிலையில் அவருடைய 25வது திரைப்படமாக உருவாக்கிய திரைப்படம் தான் அரண்மனை 4. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தகவலின்படி, அரண்மனை 4 திரைப்படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் சுந்தர் சி-யை பொருத்தவரை தன்னுடைய திரைப்படங்களை இயக்குவது, நடிப்பது என்பதை தாண்டி அதை திரையில் வெளியிடுவதையும் கணக்கிட்டு வெளியிடுபவர்.
ஏற்கனவே வெளியான அவருடைய அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்களும் பெரிய அளவில் போட்டியின்றி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த முறை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்திற்கு மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.
குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில் இது அரண்மனை படத்தின் நான்காம் பாக வசூலை பாதிக்குமோ என்ற நோக்கத்தில் தற்பொழுது பொங்கல் போட்டியில் இருந்து அரண்மனை 4ம் பாகம் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.