நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட மறுப்பு!
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழும் நயன்தாரா தற்போது இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில் சத்யராஜ், அனுபம் கேர், வினய் ராய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இடைவேளையே இல்லாமல் கனெக்ட் படம் திரையிடப்படும் என்று இயக்குநர் அஷ்வின் சரவணன் அறிவித்திருந்தார். ஆதலால், இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவிலே இருந்தது. திரையரங்குகளில் படத்திற்கு இடைவேளை விடப்படும் போது, திரையரங்குகளில் உள்ள கேண்டீன் வியாபாரம் சூடுபறக்க நடக்கும். அப்போது மட்டுமே பார்வையாளர்கள் கேண்டீன் செல்வார்கள். இதுவே இடைவேளையே இல்லாமல் படம் ஓடினால், வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், திரையரங்கு உரிமையாளர்கள் கனெக்ட் படத்தை திரையிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணமான நிலையில், 4 மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். அதெப்படி 4 மாதங்களில் இரட்டை குழந்தை என்று விவாதம் வந்த போது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்று அவர்கள் கூறியிருந்தனர். அப்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.