Lokesh kanagaraj : கமல்ஹாசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் எழுதி உள்ள கடிதம் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடிதத்தை படிக்கும்போது எவ்வளவு எமோஷனல் ஆனேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது நன்றி ஆண்டவரே என பதிவிட்டுள்ளார்.

கமல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்பு லோகேஷ், பெயருக்கு முன் “திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான, பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொது வெளியில்.
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம், யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு. லோகேஷ் கனகராஜ், தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது... விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான்” என அந்த கடிதத்தில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்... விக்ரமில் விஜய் சேதுபதியின் ‘சந்தனம்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா... வெளியான ஷாக்கிங் தகவல்
