விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.. வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் - என்ன நடந்தது?
Arundhathi Nair : தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை தான் அருந்ததி நாயர். திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான "பொங்கி ஏழு மனோகரா" என்ற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் அருந்ததி நாயர். பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "சைத்தான்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் "ஆயிரம் பொற்காசுகள்" என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அருந்ததி நாயர் கோவளம் அருகே ஒரு பைக் விபத்தில் சிக்கி தற்போது தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அருந்ததியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருந்ததி தனது சகோதரருடன் பைக்கில் சென்றபோது இந்த விபத்தில் சிக்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, நிற்காமல் வேகமாக வந்த வாகனம் அவர்கள் மீது மோதியுள்ளது. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் அருந்ததி மற்றும் அவரது சகோதரர் சாலையில் கிடப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதாக அவருடைய தோழி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார். இளம் நடிகை விபத்தில் சிக்கிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.