வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் சூர்யா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.

Vaadivaasal Movie Update
தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் தொடர் ஹிட் படங்களால் வசூல் சாதனைகள் படைத்த முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர் சூர்யா. பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்த அவர், ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக ‘கஜினி’, ‘சிங்கம்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் அவரது மார்க்கெட்டை உயர்த்தின. ஆனால் சமீப ஆண்டுகளில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறும் படங்கள் அவருக்குக் கிட்டாத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சூர்யா.
பிசியாக உள்ள சூர்யா
அவர் நடித்து முடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்னும் வெளியீட்டை காணாமல் தாமதமாகி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சூர்யாவின் கேரியரில் முக்கியமான திருப்புமுனை தேவைப்படும் நேரத்தில் இந்த தாமதம் பேசுபொருளாக மாறியுள்ளது.
மீண்டும் ஆரம்பமாகும் வாடிவாசல்
இதற்கிடையில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்திற்கு‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து பான்-இந்தியா தரத்தில் இப்படம் தயாராகி வருகிறது. அதே நேரத்தில், சூர்யாவின் கெரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படும் ‘வாடிவாசல்’ நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.
சூர்யா போட்ட கண்டிஷன்
ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாகக் கொண்டு கிராமப்புற பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்திற்காக சூர்யா உடல் எடையை அதிகரித்தல், தீவிர உடற்பயிற்சி மற்றும் காளைப்பிடி பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ‘வாடிவாசல்’ படத்திற்காக சுமார் 130 நாட்கள் தொடர்ச்சியான கால்ஷீட்டை இயக்குநர் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ஒரே கட்டமாக கால்ஷீட் ஒதுக்குவது சிரமமாக இருக்கும் நிலையில், மாதத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்க முன்வந்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
சம்மதிப்பாரா வெற்றிமாறன்?
இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்டகால திட்டமிடலுடன் நடைபெறக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் தரப்பில் தேதிகள் ஒருங்கிணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அனைத்தும் சீராக அமைந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், சூர்யாவின் அடுத்த கட்ட திரைப் பயணம் மிக முக்கியமான நிலையில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

