தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கே ஆர் தனது 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான 'ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்' திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் கே ஆர் கமல்ஹாசனுக்கு எழுதி இருந்த கடிதத்தில்... "வணக்கம்... வருகிற 22 ஆம் தேதி "ஆயிரம் பொற்காசுகள்" என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த் சரவணன் அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது. சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது படம் இருப்பதில்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன். அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் "ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்' என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன்.
Thalapathy 68: தளபதி 68 படத்தில் நடிக்கிறாரா ராகவா லாரன்ஸ்? இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!
இது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்போதுமே திரையுலகில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்வதில் முன்னணியில் நிற்பது நீங்கள் தான். திரைத் தொழிலை காப்பாற்றத் துடிக்கும் தங்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக புரியும் என்று நம்புகிறேன். எனவே இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும். எனவே இந்த முயற்சிக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும். இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி. என தெரிவித்திருந்தார்.

இந்த புதிய முயற்சிக்கு... உலகநாயகன் கமல் ஹாசன் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துளளார். இந்த பாராட்டு குறிப்பில் உலகநாயகன் கூறியுள்ளதாவது... "சிறப்பான முயற்சி... தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார். கே.ஆரியின் முயற்சி எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
