Jai Bhim/Santhanam: தன் சாதிக்கு வரிந்துகட்டினாரா நடிகர் சந்தானம்.? ட்விட்டரில் அதகளமாகும் சாதிவெறி_சந்தானம்.!
“திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி காட்டுவதற்காக மற்றவர்களைத் தாழ்த்தி காட்டுவது முறையல்ல. பட விளம்பர வேலைகளில் இருந்தால் ஜெய் பீம் பற்றி தனக்கு தெரியாது” என்று சந்தானம் பேசியிருந்தார்.
திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி காட்டுவதற்காக மற்றவர்களைத் தாழ்த்தி காட்டுவது முறையல்ல என்று கருத்து தெரிவித்த நடிகர் சந்தானத்துக்கு எதிராக ட்விட்டரில் சாதிவெறி_சந்தானம் என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது.
'ஜெய்பீம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்துவிட்டது. கடலூரில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து சர்ச்சைகள் உருவாகிவிட்டன. படத்தில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றத்தை நிகழ்த்தும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு வித்திட்டுவிட்டது.
உண்மை சம்பவத்தில் அந்தோணிசாமி என்ற துணை ஆய்வாளர்தான் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டார். ஆனால், ரீல் கதையில் குருமூர்த்தி என்று அவர் பெயர் மாற்றப்பட்டதை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. அந்தக் கதாபாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் வைத்ததன் மூலம், மறைந்த காடுவெட்டி குருவை நினைவுப்படுத்தும் ‘குரு.. குரு..’ என்று படத்தில் வரும் வசனத்துக்கு எதிராகவும் பாமகவினரும் வன்னிய அமைப்புகளும் வரிந்துகட்டியுள்ளனர். கலச காலாண்டர் காட்சி மாற்றப்பட்டபோதும். அதில் மகாலட்சுமி படம் இடம் பெற்றதையும் பாஜக எதிர்க்கிறது. ஏசு நாதர் படம் இருக்க வேண்டிய இடத்தில் மகாலட்சுமி படம் ஏன் வைக்கப்பட்டது என்று பாஜக கேள்வி எழுப்புகிறது.
படம் வெளியாகி 2 வாரங்கள் கடந்தபோதிலும் ஜெய்பீம் சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில் சூர்யாவுக்கு எதிராகவும் ஜெய்பீம் படத்துக்கு எதிராகவும் சர்ச்சைகள் சூழந்துள்ள நிலையில், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களைத்தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சந்தானம் ஒரு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சூர்யாவுக்கு எதிரானதாகவும், அவர் சார்ந்த சாதிக்காகப் பேசுவதையும் போல அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சபாபதி படத்துக்கான ப்ரோமோஷன் விழாவில் நடிகர் சந்தானம் பேசுகையில், “திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி காட்டுவதற்காக மற்றவர்களைத் தாழ்த்தி காட்டுவது முறையல்ல. பட விளம்பர வேலைகளில் இருந்தால் ஜெய் பீம் பற்றி தனக்கு தெரியாது” என்று சந்தானம் பேசினார். சந்தானம் கருத்து வெளியானதை அடுத்து, தான் சார்ந்த வன்னியர் சமூகத்துக்காகப் பேசுகிறார் என்று பலரும் ட்விட்டரில் விமர்சித்தனர். மேலும் அவருடைய படங்களில் மற்றவர்களை கேலி பேசுவதையும், மாற்றுத்திறனாளிகளைக்கூட இழிவுப்படுத்தி பேசியதையும் குறிப்பிட்டு விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் #சாதிவெறி_சந்தானம் என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது, இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னிலை பிடித்திருக்கிறது. இந்த டிரெண்டிங்கில் நடிகர் சந்தானத்தை விமர்சித்தும், ஜெய்பீம் படம், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.