Sanjjanaa Galrani : கன்னட திரையுலகில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் பிரசாத் பிட்டப்பாவின் மகன் ஆடம் பிட்டப்பா மீது போலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் சஞ்சனா. 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சஞ்சனா கல்ராணி. பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான இவர், கடந்த 2020-ம் ஆண்டு கன்னட திரையுலகை புரட்டி எடுத்த போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். அதில் இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது கற்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் சஞ்சனா கல்ராணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது கன்னட திரையுலகில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் பிரசாத் பிட்டப்பாவின் மகன் ஆடம் பிட்டப்பா மீது போலீஸ் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் சஞ்சனா. அதில் ஆடம் பிட்டப்பா தனக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பெங்களூரு இந்திரா நகர் போலீசார் ஆடம் பிட்டப்பாவை கைது செய்தனர்.

ஆடம் பிட்டப்பா தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியபோது குடிபோதையில் இருந்ததாகவும், அவரின் இந்த செயல் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இன்றி தன்னையும் தன் குடும்பத்தையும் அவதூறு செய்யும் வகையில் யாரேனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப மாட்டார்கள் என சஞ்சனா எச்சரித்துள்ளார்.