'ஆண் தேவதை' பட இயக்குனர் தாமிரா கொரோனாவிற்கு பலி..! அதிர்ச்சியில் திரையுலகினர்!
ஏற்கனவே கொரோனா பல உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளது, திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நிலை உருவாகியுள்ளது. அதே போல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்திலும் பலர் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பணக்காரர்கள், பிரபலங்கள், பாமர மக்கள் என பாரபச்சம் இல்லாமல் தாக்கி வரும் கொரோனாவை தடுப்பதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும், மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஏற்கனவே கொரோனா பல உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளது, திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டி சுழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தாமிரா. இதை தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, சமுத்திர கனி - ரம்யா பாண்டியன் நடித்த 'ஆண் தேவதை' படத்தை இயக்கி இருந்தார். இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் குடும்பம், ஆடம்பரத்தை விருப்புவதால் எப்படி சீர் குலைந்து போகிறது என்பது இந்த படம் விளக்கி கூறி இருந்தது இப்படம். எனினும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள, மாயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தாமிராவிற்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட, உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை தாமிரா உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் சமூக வலைத்தளம் மூலம் பலர் தங்களுடைய இரங்கலை தாமிராவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
53 வயதாகும் தாமிராவிற்கு பஷிரியா என்கிற மனைவி மற்றும் முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான் என்கிற மூன்று மகன்கள் மற்றும் பவ்ஷியா என்கிற மகளும் உள்ளார். இவரது உடல், மருத்துவமனையிலிருந்து நேராக திருநெல்வேலிக்கு கொண்டுசெல்லப்பட்டு உள்ளதாகவும். அவரது சொந்த ஊரில் இயக்குநர் தாமிராவின் இறுதிப் பயணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.