கடன் பிரச்சனை? பிரபல நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. உடலை மீட்டு போலீசார் விசாரணை - சோகத்தில் திரையுலகம்!
Actress Renjusha Menon Suicide : சினிமாக்காரர்கள் என்றால் மிகவும் வசதியாக, நிம்மதியாக வாழும் மனிதர்கள் என்ற ஒரு எண்ணம், நம் அனைவர் மத்தியிலும் எப்போதும் இருக்கும். ஆனால் பிரபலமான உள்ள சில நடிகர், நடிகைகளின் திடீர் மரணங்கள் நம்மை யோசிக்கவைக்கின்றது என்றே கூறலாம்.

பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று திங்கள்கிழமை காலை திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது கணவர் மனோஜுடன் வசித்து வந்த குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சில செய்திகள் அவர் இறக்கும் போது நிதி பிரச்சனையில் அவருக்கு இருந்ததாக கூறுகின்றன.
முதற்கட்ட விசாரணைகள் நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்று கூறினாலும், அவரது மரணம் தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். தற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் அளித்த தகவல்களின்படி, கொச்சியை பூர்வீகமாகக் கொண்ட ரெஞ்சுஷா மேனன், ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
'ஸ்த்ரீ' சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். 'சிட்டி ஆஃப் காட்', 'மேரிக்குண்டொரு குஞ்சாடு', 'பாம்பே மார்ச்', 'கார்யஸ்தான்', 'ஒன் வே டிக்கெட்', 'அத்புத த்வீபு' உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் துணை வேடங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல சீரியல்களில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் அவர், அதுமட்டுமின்றி, திருமதி. மேனன் ஒரு தேர்ச்சிபெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார். இவரது தந்தை பெயர் சி. ஜி ரவீந்திரநாத் மற்றும் தாயார் உமாதேவி ஆவர். இந்த சோகமான செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மற்றும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பலர் அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் மற்றொரு மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரு சில திரைப்படங்கள் மற்றும் பல சீரியல்களில் நடித்த 33 வயதான நடிகை அபர்ணா, அவரது வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை என்பது எந்த விஷயத்திற்கும் எவ்வித தீர்வையும் தராது என்பதை அனைவரும் நினைவில்கொள்ளவேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D