கடன் வாங்கி தருவதாக 1 கோடி ரூபாய் மோசடி: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது!
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருக்கு 30 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 1 கோடி ரூபாய் கமிஷன் பெற்று ஏமாற்றிய நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் பவர் ஸ்டார், லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா நடிப்பதோடு, பலருக்கு கமிஷன் அடிப்படையில் கடன் வாங்கி தரும் புரோக்கராகவும், அவர் தம்மை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
அதனால், கடந்த 2013 ம் ஆண்டு, டெல்லியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளருக்கு 1000 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக மோசடி செய்த வழக்கில், கடந்த மாதம் அவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள அவரை, பெங்களூரு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த மசூர் அலாம், அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் ஆகியோரிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 1 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்துள்ளார். அந்த வழக்கில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்துள்ள கர்நாடக போலீசார், அவரை பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.