Yashika: நீ இன்னும் சாகலையானு கேட்ட நெட்டிசன்... கலங்க வைத்த யாஷிகாவின் பதில்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, 4 மாதங்களுக்கு பின் ஹேர் கலர் செய்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த அவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. இவர் கைவசம் சல்பர், எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் யாஷிகா, கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சுமார் 4 மாத தீவிர சிகிச்சைக்கு பின் அவர் படிப்படியாக குணமாகி வருகிறார். சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கூட கலந்துகொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, 4 மாதங்களுக்கு பின் ஹேர் கலர் செய்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘நீ இன்னும் சாகலையா’ என கேட்டிருந்தார். இந்த கேள்வியால் மனமுடைந்து போன யாஷிகா, ’நான் சீக்கிரம் சாகனும்னு வேண்டிக்கோங்க’ என பதிலளித்தார். அதற்கு அந்த நெட்டிசன், ‘நான் நிச்சயம் வேண்டிக்கொள்கிறேன்’ என தெரிவித்தார். யாஷிகாவிடம் இவ்வாறு கேட்ட நெட்டிசனுக்கு வலைதள வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தைரியமாக இருக்கும்படி யாஷிகாவுக்கு அறிவுரையும் கூறி வருகின்றனர்.