கொரோனா நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கிய கேப்டன்.. வீடியோ மூலம் இரங்கல் - எமோஷனல் ஆனா யோகி பாபு!
Yogi Babu About Vijayakanth : நேற்று டிசம்பர் 28ம் தேதி காலை 6.15 மணியளவில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தின் உயிர் பிரிந்தது. பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று தேமுதிக அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் அவர்களுடைய உடல், தீவு திடலுக்கு கொண்டுவரப்பட்டது. இரவு முழுவதும் பெரும் திரளான மக்கள் தொடர்ச்சியாக அங்கு வந்து நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
நேற்று இரவு தளபதி விஜய் அவர்கள் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து கண்கலங்கி மரியாதை செலுத்தி சென்றார். அதே போல நேற்று "வேட்டையன்" பட படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இன்று விஜயகாந்த் உடலுக்கு தனது இறுதி மரியாதை செலுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்: தேமுதிக அறிவிப்பு
இந்நிலையில் படபிடிப்பு காரணமாக நேரில் வர முடியாத நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் தங்களுடைய வருத்தங்களை வீடியோ மூலம் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் குருவாயூரில் பிரித்விராஜ் அவர்களின் படத்தின் படபிடிப்பில் இருக்கும் நடிகர் யோகி பாபு அவர்களும் ஒரு உருக்கமான காணொளியை வெளியிட்டுள்ளார்.
அவருடைய மறைவு தமிழ் திரை உலகிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பு என்று கூறிய யோகி பாபு, பெருந்தொற்று காலத்தில் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறிய பொழுது சற்றும் யோசிக்காமல் ஒரு மணி நேரத்திற்குள் அவர் தயாராகி தன்னை சந்தித்ததாகவும். சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடினேன் என்றும் அவர் கூறியுள்ளார். நடிப்பு மற்றும் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று கூறிய யோகி பாபு அவருடைய ஆன்மா சாந்தியடைய தான் கடவுளை வேண்டிக் கொள்வதாகவும் கூறினார்.