விஜய் வீட்டில் விடிய, விடிய தொடரும் ஐ.டி. ரெய்டு.... 13 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை...!
நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு விஜய்யை அழைத்து வந்த போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
"பிகில்" பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஃபைல் ஒன்று சிக்கியதாகவும், அதில் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகை, படத்தின் வரவு செலவு, வசூல் விவரங்கள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாஸ்டர் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நெய்வேலிக்கு புறப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் விஜய் சொன்ன தகவலும், ஏஜிஎஸ் ஃபைலில் இருந்த தகவலும் இடித்துள்ளது. அதனால் தான் விஜய்யை கையோடு வாங்க போலாம் என அவர் காரில் வைத்தே சென்னை அழைத்து வந்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு விஜய்யை அழைத்து வந்த போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலிகிராமம், நீலாங்கரை, பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 8 ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், விஜய் வீட்டிற்கு முன்பு துப்பாக்கி ஏந்தி 7 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நிறுத்தப்பட்ட மாஸ்டர் படப்பிடிப்பை இன்று தொடரலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் இன்றும் விஜய் வீட்டில் சோதனை தொடர்வதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிகில் பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜயிடம் கிடுக்குபிடி விசாரணை தொடரும் இதே நேரத்தில், இயக்குநர் அட்லியிடமும் விசாரணை நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.