சாத்தான்குளம் லாக்கப் அத்துமீறல்! நீதிக்காக பொது மக்களில் ஒருவனாய் காத்திருக்கிறேன் நடிகர் சூர்யா அறிக்கை
தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சமீபத்தில் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பத்து நிமிடம் கடை திறந்து வைத்ததால், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் கடைகள் என எதுவும் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 19ந் தேதி சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா? என்பதை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உறுதி செய்ய வந்துள்ளார். அப்போது ஜெயராஜ் என்பவர் தனது செல்போன் கடையை மூடாமல் திறந்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது கடையை உடனடியாக மூடுமாறு பாலகிருஷ்ணன், ஜெயராஜை கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி! மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை!
அப்போது ஜெயராஜுக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் போலீசையே எதிர்த்து பேசுறீயா? எனக்கூறி, ஜெயராஜை சட்டையைப் பிடித்து இழுத்து காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பென்னீஸ் ஏன் எங்க அப்பாவை இப்படி இழுத்து போறீங்க? என கேட்க அவரையும் காவல்நிலையம் வா எனக்கூறிவிட்டு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பென்னீஸ் தனது அப்பாவின் நிலையை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரையும் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், கோவில்பட்டி கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார். இந்த தம்பவம் இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
மேலும் செய்திகள்: திருமணமான ஒரே நாளில் வனிதா வாழ்க்கையில் வெடித்த பிரச்சனை! பீட்டர் பால் மனைவி பரபரப்பு புகார்..!
ஊரடங்கிலும், உயிரை பணையம் வைத்து மக்களை காப்பற்றுகிறார்கள் என போலீசாரை புகழ்ந்த பலர், அவர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து, நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. "மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்' என்று கடந்து செல்ல முடியாது.
போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்.
மேலும் செய்திகள்: யாஷிகாவுக்கே சவாலா...? தோழியின் அந்த போஸுக்கு நிகராக ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட போட்டோஸ்..!
நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், 'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் 'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான 'திட்டமிடப்பட்ட குற்றமாக' (Organised Crime) நடக்கிறது.
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், 'போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும்' என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்.
இந்த கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இதேபோல, 'தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது' என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது 'அதிகார அமைப்புகள்' அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.
மேலும் செய்திகள்: மகள் மற்றும் நண்பர்கள் முன்னாள் புதுமண தம்பதி அடித்த லூட்டி! களைகட்டிய வனிதா - பீட்டர் பால் திருமண கொண்டாட்டம்
'இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?' என்று எழுந்த விமர்சனத்துக்குப் பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார் 'பணியிடை நீக்கம்' செய்யப்பட்டனர். காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டுமொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். 'கொரோனா யுத்தத்தில்' களத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள்.
அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
மேலும் செய்திகள்: திருமணத்திற்காக மேக்-அப் போட்டு தயாராவதை லைவ் செய்த வனிதா..! வீடியோ
இனிமேலும் இதுபோன்ற 'அதிகார வன்முறைகள்' காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்புமிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு 'நீதி நிலைநிறுத்தப்படும்' என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.