Actor Soori about Vijay: சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நடிகர் சூரி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 10 வயசு பசங்க கூட அரசியல் பேசுறாங்க. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பேசுவது ஆரோக்கியமான விஷயம்தான் என நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

மண்டாடி புரமோஷன்

மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. இப்படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், தெலுங்கு நடிகர் சுஹாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Scroll to load tweet…

படம் வெளியாவதற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில், ‘மண்டாடி’ படக்குழுவினர் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி இன்று சென்னையில் இருந்து கோவை சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

10 வயசு பசங்க கூட அரசியல் பேசுறாங்க

அப்போது முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.இதற்கு பதிலளித்த சூரி, “தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்கள் சட்டசபை நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். 10 வயசு பசங்க கூட அரசியல் பேசுறாங்க. இது ஆரோக்கியமான விஷயம்” என்று தெரிவித்தார்.

அந்த இடம் ஏமாற்றம்தான்

அதே நேரத்தில், “சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடம் ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று தனது தனிப்பட்ட வருத்தத்தை சூரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சூரியின் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியலில் முழுநேர கவனம் செலுத்துவதற்காக சினிமாவுக்கு விடை கொடுத்திருப்பது திரையுலகில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.