கார்த்தியை கதறி அழ வைத்த ரசிகன்... யார் தெரியுமா?
நடிகர் கார்த்தி, அவருடைய தீவிர ரசிகர் ஒருவரின் மறைவுக்குச் சென்று அங்கு அனைவர் முன்னிலையிலும் கதறி அழுத செய்தியை நமது தளத்தில்கூட தெரிவித்திருந்தோம்.
இப்படி ஒரு நடிகரை அழ வைத்த அந்த இளைஞர் யார்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்ற மாவட்டச் செயலாளராக இருந்த ஜீவன் குமார்.
27 வயதான ஜீவன் குமார் நேற்று தன்னுடைய நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கார்த்தி என்பவர் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவர்கள் தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜீவன் குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஏற்கனவே ஜீவன்குமாரை நன்கு அறிந்தவர் நடிகர் கார்த்தி. எனவே இந்தத் தகவல் அறிந்ததும் உடனடியாக தன்னுடைய படப் பிடிப்பை கேன்சல் செய்து விட்டு ஜீவன் குமாரின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது தன்னையும் மறந்து கார்த்தி அந்த இடத்தில் அழுதார்.
ஜீவன் குமாருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. தனது திருமணத்தின் போது, கார்த்திக்கு பத்திரிகை கொடுத்து அழைத்துள்ளார் ஜீவன் குமார். ஆனால் சில காரணங்களால் கார்த்தி அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனதாம்!