Ganja Karuppu Brother Death : நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி விபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து விஜய் அரசுக்கு கஞ்சா கருப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
Ganja Karuppu Brother Death : நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி அறிவழகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தால் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், தனது தாயாரின் உடல்நிலை குறித்து கஞ்சா கருப்பு உருக்கமாக பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குப் பிறகு வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கஞ்சா கருப்பு தம்பி மரணம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனவேதனையுடன் பேசிய கஞ்சா கருப்பு, “அதிகாலை டீ குடிக்க வெளியே சென்ற என் தம்பியை மோதி விட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்றிருக்கிறது. இதுவரை அது எந்த வாகனம் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் என் அம்மா மிகவும் மனஉளைச்சலில் இருக்கிறார். அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது,” என்று கண்கலங்கினார்.
மேலும், “இந்த விபத்துக்கு காரணமானவரை கண்டுபிடித்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். அதுவே எங்கள் குடும்பத்திற்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும்,” என்றும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


