திருப்பத்தூர் அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் பலி! பெண் மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்!

Aug 19, 2023, 9:16 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சிங்கபாளையம் பகுதியை சாமிகண்ணு மனைவி கோமதி (வயது 25) இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கணம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுதிக்கப்பட்டார். அப்போது சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவர்கள் ஆலோசனை செய்ததால் அங்கிருந்து ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோமதியை மாற்றப்பட்டு மருத்துவர் மனோன்மணி குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் நன்றாக இருந்த கோமதி திடீரென உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கோமதின் உறவினர்கள் அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோமதி உடலை வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சிங்கப்பாளையம் கொண்டு வரும்பொழுது உறவினர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்து சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினர். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், பெண்ணின் உறவினர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.