நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலெக்ஸ் என சூர்யாவின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் செம்ம பிசியாக உள்ளார் சூர்யா. அவர் தயாரிப்பில் இந்தியில் சர்பிரா என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இது சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... சுடரின் சமையலில் மயங்கிய எழில்.. மனோகரி பார்த்தா என்ன ஆகுறது? நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்
இதுதவிர நடிகர் கார்த்தி நடிப்பில் ஒரு படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறார் சூர்யா. இவ்வளவு பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சூர்யாவின் வருகையை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.