Parenting Tips: கோடையில் குழந்தைகளை தாக்கும் பொதுவான தொற்றுக்கள் இவைகளே! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

By Kalai SelviFirst Published Apr 16, 2024, 12:56 PM IST
Highlights

கோடையில் அதிக வியர்வை காரணமாக, தொற்றுகள் வருவது பொதுவானது. இந்நிலையில், உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த பொதுவான கோடை நோய்த்தொற்றுகள் குறித்து கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

கோடை காலம் வந்தாலே அவற்றுடன் கோடை நோய்த்தொற்றுக்களும் கூடவே வந்துவிடும். குறிப்பாக, வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால், இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். வறட்சி, வியர்வை, தூசி போன்றவை கோடையில் ஏற்படும் மற்ற நோய்களுடன் சேர்ந்து இந்த நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகின்றன. கோடை வெயிலின் தாக்கத்தால், சோர்வு பெரியவர்களுக்கு வருவது பொதுவானவை என்றாலும், குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றன.

வயிறு மற்றும் குடல் தொற்று: கோடையில் வைரஸ் தொற்று காரணமாக வயிறு மற்றும் குடல் தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம், குடத்தில் குறைவாக நீர் இருக்கும் போது அடிமட்ட நீர் மிகவும் மாசுபட்டு இருக்கும். அந்த நீரை குடிக்கும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து வரும். எனவே, இந்த உங்கள் கைகளை நன்கு கழுவி, சுத்தமான மற்றும் நல்ல நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுங்கள்.

பூச்சிகள் கடிப்பது: கொசுக்கள், எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் கோடையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவை குழந்தைகளை கடித்தால் அரிப்பு, வீக்கம், வலி மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே, இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, குழந்தைகள் வெளியில் செல்லும்போது முழுக் கை சட்டை மற்றும் பேண்ட்டை அணியுங்கள். மேலும், பூச்சிகள் பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் நீர் தேங்கும் பகுதிகளை முடிந்தவரை தவிர்க்கவும்.

பூஞ்சை தொற்று: கோடை காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக, பூஞ்சை தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக, அக்குள், உடல் மடிப்புகள், இடுப்பு பகுதி போன்ற இடத்தில் ஈரப்பதம் இருக்கும். இங்கு பூஞ்சை தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் இந்த பகுதிகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது  இந்த பாகங்களை துடைக்கவும் மற்றும் கோடைக்கு ஏற்றால் போல் நல்ல ஆடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவிர்கள்.

சூரிய ஒளி: கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த கதிர்களின் வெளிப்பாடு சருமத்தை கருமையாக்கும். ஒரு குழந்தையின் மென்மையான தோல் இந்த கதிர்களின் தாக்கத்தை தாங்க முடியாது. எனவே, நீங்கள் குழந்தையை வெளியே அழைத்து சென்றால், நல்ல தரமான சன் ஸ்கிரீனை பயன்படுத்தவும் மற்றும் சூரிய ஒளியில் இருந்து அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆடைகளை குழந்தைக்கு அணியுங்கள்.

கோடை விடுமுறை, வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கான நேரம் என்றாலும், இந்த நேரத்தில் எதிர்கொள்ளும் தொற்றுநோய்களிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

click me!