இலங்கையில் உணவு கிடைக்காமல் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அதாவது நாட்டின் 24 சதவீத மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கை அரசு சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முறையாக பெரிய அளவில் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. தேவையில்ல்லாத திட்டங்களில் பல கோடி ரூபாய்களை சீனாவுடன் சேர்ந்த வாரி இறைத்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சீனாவிடம் கடன் வாங்கி ஹம்பன் தோட்டா துறைமுகம் கட்டியது என்று பல்வேறு தவறுகளை இலங்கை அரசு செய்து இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இனப்போரின்போது அதிகளவில் நிதியை கரைத்து இருந்த இலங்கை, சீனாவுடன் கைகோர்த்தது. சீனா உள்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 55 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் பெற்று இருந்தது. கடனுக்கான வட்டியை கட்ட முடியாமல் கடந்த மார்ச் மாதம் திணறியது. இலங்கை அரசாங்கத்தின் தவறுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இத்துடன் கொரோனாவின் பாதிப்புகளும் இலங்கையை பெரிய அளவில் பாதித்து இருந்தது. இவை அனைத்தும் ராஜபக்சே சகோதர்களின் ஆட்சியால் ஏற்பட்டது என்று மக்கள் வெகுண்டு எழுந்தனர்.

உள்நாட்டில் உற்பத்தி இல்லாத நிலையில், பால் பவுடர், மருந்து, எரிபொருள், சமையல் காஸ், டாய்லெட் பேப்பர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் இன்றும் திண்டாடி வருகின்றனர். பேப்பர் இல்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இது மக்களை கொந்தளிக்க வைத்தது. எரிபொருள் கிடைப்பதற்கு மணிக் கணக்கில் பெட்ரோல் பங்க் முன்பு காத்துக் கிடந்தனர். பொருட்களின் விலை விண்ணை முட்டியது. 

இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்து கலைப்பொருட்கள் மாயம்!!

இந்த நிலையில்தான் உலக உணவு திட்ட அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அதாவது நாட்டின் 24 சதவீத மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கண்டறிந்தது. இவர்களில் 65,600 பேர் உணவு கிடைக்காமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக அரசாங்கம் செயல்படவில்லை என்றால், இன்னும் ஆயிரக்கணக்கில் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

போதிய அளவிற்கு 67 லட்சம் மக்கள் உணவு சாப்பிடுவதில்லை, 53 லட்சம் மக்கள் மூன்று நேர உணவு சாப்பிட முடியவில்லை, உடனடியாக மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற 63 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் வசிக்கும் மக்களில் ஐந்தில், மூன்று பகுதியினரின் வீடுகளில் வருமானம் பாதியாக குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு விதைகள், உரம், நிதியுதவி கிடைக்காவிட்டால், வரும் பருவ காலத்தில் நடவுப் பணிகள் 50 சதவீதம் குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரிசி உற்பத்தி மட்டுமின்றி, மீன் வளர்ப்பு, கால்நடைகள் என்று அனைத்தும் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் தொடரும் பதற்றம்; நாய் ஆக இருக்க விரும்பவில்லை எனக் கூறி கடற்படையில் 2 பேர் ராஜினாமா!!