ரஷ்ய அதிபர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பில், இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்துவது மற்றும் தேசிய நாணயங்களில் பரிவர்த்தனை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வருடாந்திர இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.
இரு நாடுகளும் இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர்ந்து வருவதாகவும் புடின் கூறினார். உலகளாவிய வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக ஒரு நாணயம் உருவாகும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், புடினின் இந்தக் கருத்து மேற்கத்திய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேசிய நாணயங்களின் பயன்பாடு
"கடந்த ஆண்டு (2024) நமது இருதரப்பு வர்த்தக விற்றுமுதல் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, ஒரு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு வர்த்தகமும் அதே ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்று தற்போது நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அதிபர் புடின் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நமது நாடுகள் படிப்படியாக இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர்கின்றன. ஏற்கெனவே 96% வணிக பரிவர்த்தனைகளுக்குக் காரணமாக உள்ளது," என்று அதிபர் புடின் கூறினார். இது உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், BRICS நாடுகளின் கூட்டு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தடையற்ற எரிபொருள் விநியோகம்
"வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கான எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி தொடர நாங்கள் தயாராக உள்ளோம்," என்றும் புடின் உறுதியளித்தார்.
"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்றுள்ளன. பஹல்காம் தாக்குதலாக இருந்தாலும் சரி அல்லது க்ரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி, இந்தச் சம்பவங்கள் அனைத்தின் மூலமும் ஒன்றுதான். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் விழுமியங்களுக்கு எதிரான நேரடித் தாக்குதல்," என்று புடின் குறிப்பிட்டார்.
உக்ரைன் போர்
போரைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்காகப் பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் நன்றி தெரிவித்தார். உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வுகாணும் திட்டத்தின் விவரங்களைப் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார். இந்தியா அமைதிக்கான சாம்பியனாக விளங்குவதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார் என்றும் புடின் கூறினார்.
"கடந்த அரை நூற்றாண்டாக, ரஷ்யா இந்திய ராணுவத்திற்கு, வான் பாதுகாப்புப் படைகள், விமானப் போக்குவரத்து, கடற்படை உட்பட பல துறைகளுக்குத் தேவையான ஆயுதம் அளிப்பதற்கும் நவீனமயமாக்குவதற்கும் உதவி வருகிறது," என்று புடின் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால வாய்ப்புகள்
" இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு ஒரு துருவ நட்சத்திரம் போல நிலைத்திருக்கிறது. இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது," என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் 30 நாட்கள் இலவச இ-சுற்றுலா விசா மற்றும் 30 நாட்கள் குழு சுற்றுலா விசா ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.


