பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில், பயங்கரவாதிங்கள் இருப்பதாகக் கருதி விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்வாவில், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானப்படை தாக்குதல்
திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில், பஷ்டூன் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாட்ரே தாரா கிராமத்தின் மீது, JF-17 போர் விமானங்கள் எட்டு LS-6 ரக குண்டுகளை வீசியுள்ளன. இந்த தாக்குதலில் கிராமத்தின் பெரும் பகுதி முற்றிலும் அழிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் விமானப்படை, இந்த குண்டுவீச்சு தாக்குதலின் மூலம் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகள் மறைந்துள்ள இடங்களை குறிவைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், தாக்குதலில் பலியான அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்று கூறப்படுகிறது.
ராணுவ நடவடிக்கைகள்
சமீப நாட்களாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்த மலைப் பிரதேசத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையில் ஏழு TTP பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. இவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டினர் மற்றும் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் கைபர் பக்துன்வாவில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில், குறைந்தது 31 TTP பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அண்மைக் காலமாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்பதா அல்லது பாகிஸ்தானுடன் நிற்பதா என்பதை ஆப்கானிஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என எச்சரித்திருந்தார்.
