பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு, 'ஜமாத்-உல்-முமினத்' என்ற பெயரில் மகளிர் பிரிவைத் தொடங்கியுள்ளது. மேலும் பெண்களைச் சேர்க்கவும், நிதி திரட்டவும் 'துஃபத்-அல்-முமினத்' என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பைத் தொடங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட, பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பு, பெண்களைத் திரட்டுவதற்காக ‘ஜமாத்-உல்-முமினத்’ (Jamat ul-Muminat) என்ற பெயரில் ஒரு மகளிர் பிரிவை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் பயங்கரவாத அமைப்பு தற்போது தனது மகளிர் பிரிவில் மேலும் அதிக பெண்களைச் சேர்ப்பதற்கும், நிதி திரட்டுவதற்காகவும், ‘துஃபத்-அல்-முமினத்’ (Tufat al-Muminat) என்ற பெயரில் ஒரு ஆன்லைன் பயிற்சி வகுப்பைத் தொடங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் ஆட்சேர்ப்பு
இந்த அமைப்பை வலுப்படுத்துவதற்கும், அதன் மகளிர் பிரிவில் அதிக பெண்களைச் சேர்ப்பதற்கும் இந்தக் வகுப்பு நடத்தப்படுகிறது. இதன் கீழ், மசூத் அசார் மற்றும் அவரது தளபதிகளின் உறவினர்கள் உட்பட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்களின் குடும்பப் பெண்களுக்கு ஜிஹாத் மற்றும் இஸ்லாம் கண்ணோட்டங்களில் இருந்து பெண்களின் கடமைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்புக்கான இந்தத் திட்டம் நவம்பர் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது எனத் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் 40 நிமிடங்கள் ஆன்லைன் மீட்டிங் தளங்கள் மூலம், மசூத் அசாரின் இரண்டு சகோதரிகளான சாடியா அசார் (Sadiya Azhar) மற்றும் சமீரா அசார் (Samaira Azhar) ஆகியோர் வகுப்புகளை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமதுவின் மகளிர் பிரிவில் பெண்களைச் சேருமாறு ஊக்குவித்து பேசவுள்ளனர்.
பெண்களிடம் நிதி வசூல்
மசூத் அசார் நிதி திரட்டுவதற்கு எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. தற்போது இந்த ஆன்லைன் வகுப்பில் சேரும் ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 500 பாகிஸ்தான் ரூபாயை (PKR) நன்கொடையாக வசூலிக்கிறது. அவர்களை ஆன்லைன் தகவல் படிவத்தையும் பூர்த்தி செய்ய வைக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் அக்டோபர் 8-ஆம் தேதி, மசூத் அசார் ஜெய்ஷ்-இ-முகமதுவின் மகளிர் பிரிவான ‘ஜமாத்-உல்-முமினத்’ அமைப்பை அறிவித்தார். அக்டோபர் 19-ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (POK) ராவல்கோட்டில் பெண்களை மகளிர் பிரிவில் கொண்டுவரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
