ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.
ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் இன்று இரவு (இந்திய நேரப்படி) சுமார் 7.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவானது என்றும் நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில், வடக்கு அட்சரேகை 41.05 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 142.37 டிகிரி என்ற பகுதியில் மையம்கொண்டிருந்தது என்றும் இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களிலும், சாலைகளிலும் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


