iPhone 17 Pro 2026ல் ஐபோன் 17 ப்ரோ விலை கடுமையாக உயர வாய்ப்பு! மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக தள்ளுபடி கிடைப்பது கடினம். முழு விபரம் உள்ளே.

ஆப்பிள் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. நீங்க ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) வாங்கத் திட்டமிட்டிருந்தால், அதை வாங்குவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கலாம். ஏனெனில், 2026 ஆம் ஆண்டில் ஐபோன் மாடல்களுக்குத் தள்ளுபடி கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறப்போகிறது. வரவிருக்கும் ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்படும் மெமரி சிப்களின் (Memory Chips) விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கவலைக்கிடமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 12GB மெமரி யூனிட்டின் விலை சுமார் 25 டாலரிலிருந்து 70 டாலராக, அதாவது 230 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையையும் ஆட்டிப்படைக்கப் போகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆப்பிள் நிறுவனத்திற்கு காத்திருக்கும் சவால்

வழக்கமாக, ஆப்பிள் நிறுவனம் நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் உதிரிபாகங்களின் விலை மாற்றங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். ஆனால், இம்முறை டிஆர்ஏஎம் (DRAM) மெமரி சிப்களின் விலை உயர்வு ஆப்பிளுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் எஸ்கே ஹினிக்ஸ் (SK Hynix) மற்றும் சாம்சங் (Samsung) போன்ற முக்கிய சப்ளையர்களுடன் வைத்துள்ள ஒப்பந்தங்கள் 2026 ஜனவரியில் முடிவடைய உள்ளன. இந்த ஒப்பந்தம் முடியும் தருவாயில், சந்தை நிலவரப்படி புதிய விலையை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஆப்பிளுக்கு ஏற்படும். பழைய விலையான 25 டாலருக்கு இனி மெமரி சிப்களை வாங்குவது நடக்காத காரியம் என்பதால், ஆப்பிள் கடுமையான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

சாம்சங் கையில் அதிகாரம்

செமிகண்டக்டர் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன. எஸ்கே ஹினிக்ஸ் மற்றும் மைக்ரான் ஆகிய நிறுவனங்கள், அதிக லாபம் தரும் ஏஐ (AI) பயன்பாட்டிற்கான எச்.பி.எம் (HBM) சிப்களில் கவனம் செலுத்துவதால், சாதாரண மெமரி சிப் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால், ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கையே (Samsung) அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏகபோக நிலையைப் பயன்படுத்தி சாம்சங் தனது வணிக அதிகாரத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. இது ஆப்பிளின் பேரம் பேசும் திறனைப் பாதிக்கும். மேலும், வரவிருக்கும் ஐபோன் 18 மாடலில் அதிவேக செயற்கை நுண்ணறிவு அம்சங்களுக்காகப் புதிய வகை மெமரி சிப்களை ஆப்பிள் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமை

தொழில்நுட்ப ரீதியாகப் பல மேம்படுத்தல்களை ஆப்பிள் செய்து வருவதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் அதிக மெமரி தேவைப்படுகிறது. மெமரி சிப்களின் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், ஆப்பிள் தனது உற்பத்திச் செலவை ஈடுகட்ட, அந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தும். மெமரி சிப்பின் விலை 70 டாலராகவே நீடித்தால், ஆப்பிள் தனது ஐபோன் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, எதிர்காலத்தில் ஐபோன் வாங்குபவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் 2026ல் தள்ளுபடிகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.