தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனங்கள் ஏர்டெல், ஜியோ

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற நிறுவனங்கள் சேவையை வழங்கினாலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்டது இந்த இரண்டு நிறுவனங்கள் தான். இந்நிலையில் சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, கேரளா என பல்வேறு இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நேற்று இரவு 8 மணி முதல் பாதிக்கப்பட்டது.

ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிப்பு

இதனால் பல மணி நேரமாக ஏர்டெல் நெட்வொர்க் சேவையை பெற முடியாமல் வாடிக்கையாளர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக மொபைல் டேட்டாவும் பயன்படுத்த முடியாமல் பெட்ரோல் பங்க், உணவகங்கள், ஆன்லைன் டெலிவரி என பல இடங்களில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் புகார் அளித்தனர். அதாவது தொலை தொடர்பு புகார்கள் தெரிவிக்க வேண்டிய டவுன் டிடெக்டர் இணையதளத்தில் ஏர்டெல் நிறுவனம் மீது இரவு 9 மணி வரை பாதிப்பு குறித்து 8,000க்கும் மேற்பட்ட புகார்கள் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இரவு வரை சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கபடாததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ஏசியா நெட் தமிழில் செய்தி வெளியான நிலையில் இதற்கு ஏர்டெல் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம் அளித்த ஏர்டெல் நிறுவனம்

அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏர்டெல் தற்போது தற்காலிக நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்து வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து, சேவைகளை விரைவாக மீட்டெடுக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன.