செவ்வாய்க்கிழமை மாலை ஏர்டெல் நெட்வொர்க் சேவையில் இடையூறு ஏற்பட்டதால், சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பயனர்கள் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மெதுவான மொபைல் டேட்டா, அழைப்புகள் துண்டிக்கப்படுவது போன்ற புகார்கள் பதிவாகியுள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் செவ்வாய்க்கிழமை மாலை பரவலான நெட்வொர்க் இடையூறுகளை சந்தித்தது. இதனால் சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.
மொபைல் டேட்டா சேவைகள் மெதுவாக செயல்படுவதாகவும், அழைப்புகள் திடீரென துண்டிக்கப்படுவதாகவும் சில பயன்ரகள் கூறுகிறார்கள். நெட்வொர்க் கவரேஜ் இல்லாதது, VOLTE சிக்கல்கள் குறித்து பலர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், விரக்தியடைந்த பயனர்கள் சமூக ஊடக தளங்களில் புகார்களைப் பதிவிட்டுள்ளனர். பலர் ஏர்டெலை விமர்சித்து மீம்ஸ் உருவாக்கி பகிர்கின்றனர்.
சமூக ஊடகங்களில் புகார்:
"சென்னையில் ஏர்டெல் வேலை செய்கிறதா? VOLTE கிடைக்கவில்லை, அழைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரே நெட்வொர்க்கில் உள்ளவருடன் கூட போனில் பேச முடியவில்லை," என்று ஒரு பயனர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நெட்வொர்க் செயலிழப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, இரவு 8:30 மணி நிலவரப்படி ஏர்டெல் சிக்கல் பிரச்சினை பற்றி 6,800 க்கும் மேற்பட்டபுகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான புகார்கள் மொபைல் கிடைக்கவில்லை என்றும் வாய்ஸ் கால் செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றன.
நாடு முழுவதும் ஏர்டெல் செயலிழப்பு?
“இந்தியா முழுவதும் ஏர்டெல் செயலிழந்துள்ளது, எந்த சிக்னலும் வரவில்லை” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். ஆனால், நாடு முழுவதும் ஏர்டெல் சிக்னல் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்தும் தகவல் இல்லை.
தற்போதைய நிலவரப்படி, இந்த சிக்னல் பிரச்சினை பற்றி ஏர்டெல் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
