AI Chatbots ChatGPT, Gemini போன்ற AI-யிடம் கேட்கக்கூடாத 6 விஷயங்கள்! மருத்துவம் முதல் வங்கி கணக்கு வரை எதெல்லாம் ஆபத்து? முழு விவரம்.
இன்று மாணவர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை அனைவரின் அன்றாட வாழ்விலும் ChatGPT, Google Gemini மற்றும் Grok போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் இடம்பிடித்துவிட்டன. கட்டுரைகள் எழுதுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது என இவை நமக்குத் தோள்கொடுத்தாலும், சில கேள்விகளை இவற்றிடம் கேட்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் தனியுரிமை (Privacy) மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, AI சாட்பாட்களிடம் நீங்கள் கேட்கவே கூடாத 6 விஷயங்களைப் பார்ப்போம்.
1. டாக்டருக்கு பதில் AI... வேண்டவே வேண்டாம்!
AI சாட்பாட்கள் மருத்துவர்கள் அல்ல. மருத்துவச் சொற்களுக்கு அர்த்தம் சொல்லுமே தவிர, உங்களுக்கு என்ன நோய் என்று அதனால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. தலைவலிக்கு AI சொல்லும் மருந்தைச் சாப்பிடுவது விபரீதத்தில் முடியும். உங்கள் உடல்நிலை, மருத்துவ வரலாறு தெரியாமல் அது கொடுக்கும் ஆலோசனை தவறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, உடல்நலப் பிரச்சனைகளுக்கு எப்போதும் மருத்துவரையே நாடுங்கள்.
2. வங்கி கணக்கு, பாஸ்வேர்ட்... பரம ரகசியம்!
உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் எண், பான் கார்டு எண், பாஸ்வேர்ட் அல்லது ஓடிபி (OTP) ஆகியவற்றைத் தவறுதலாகக் கூட சாட்பாட்களில் டைப் செய்யாதீர்கள். "நாங்கள் உங்கள் தகவல்களைப் சேமிப்பதில்லை" என்று நிறுவனங்கள் கூறினாலும், தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது ஹேக்கிங் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இது ஆன்லைன் மோசடிகளுக்கு வழிவகுக்கும்.
3. சட்டவிரோத செயல்கள்... சிறைக்கு வழிவகுக்கும்!
ஹேக்கிங் செய்வது எப்படி? வரியை ஏய்ப்பது எப்படி? போன்ற சட்டவிரோத கேள்விகளை AI-யிடம் கேட்காதீர்கள். பெரும்பாலான AI கருவிகள் இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்காது என்றாலும், இதை முயற்சிப்பதே ஆபத்தானது. ஆன்லைனில் நீங்கள் செய்யும் இத்தகைய தேடல்கள் கண்காணிக்கப்படலாம்; இது உங்களைச் சட்டச் சிக்கலில் அல்லது சிறையில் தள்ளக்கூடும்.
4. AI சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல!
AI சாட்பாட்கள் இணையத்தில் உள்ள தரவுகளைத் திரட்டிப் பதில் தருகின்றன. சில நேரங்களில் அவை பழைய தகவல்களையோ அல்லது முற்றிலும் தவறான தகவல்களையோ தரலாம். எனவே, சட்டம், நிதி முதலீடு மற்றும் முக்கிய செய்திகளுக்கு AI-யை மட்டும் நம்பியிருக்காதீர்கள். எப்போதும் அதிகாரப்பூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
5. வாழ்க்கையை மாற்றும் முடிவுகள்... மனிதர்களே பெஸ்ட்!
"நான் வேலையை ராஜினாமா செய்யலாமா?", "இந்தத் தொழிலைத் தொடங்கலாமா?" போன்ற கேள்விகளுக்கு AI சரியான தீர்வைத் தராது. உங்கள் குடும்பச் சூழல், பொருளாதார நிலை மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரு இயந்திரத்தால் புரிந்து கொள்ள முடியாது. நன்மை தீமைகளைப் பட்டியலிட AI உதவலாம்; ஆனால், இறுதி முடிவை அனுபவம் வாய்ந்த மனிதர்களிடம் கலந்துாலோசித்தே எடுக்க வேண்டும்.
6. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா இயந்திரம்?
நீங்கள் மிகுந்த மனக்கஷ்டத்திலோ அல்லது தனிமையிலோ இருந்தால், AI-யிடம் ஆறுதல் தேடுவதைத் தவிர்க்கவும். அது அனுதாபத்துடன் பேசுவது போல் தோன்றினாலும், அதற்கு உண்மையான உணர்ச்சிகள் கிடையாது. மனநலம் சார்ந்த தீவிரமான பிரச்சனைகளுக்கு, நண்பர்கள், உறவினர்கள் அல்லது மனநல மருத்துவர்களிடம் பேசுவதே சிறந்தது.
சுருக்கமாகச் சொன்னால்...
AI என்பது ஒரு கருவி மட்டுமே; அது மனிதர்களுக்கு மாற்றாகாது. அதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள், ஆனால் உங்கள் வாழ்க்கையின் லகானை அதன் கையில் ஒப்படைத்துவிடாதீர்கள்!


