கொடைக்கானல் வெள்ளகவி கிராமத்தில் சாலை வசதியின்றி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதி மக்கள் டோலி கட்டி தூக்கி வந்தும் காப்பாற்ற முடியவில்லை.

Road facilities in the hill villages of Dindigul : தமிழகத்தில் பல்வேறு மலைப்பகுதிகள் உள்ளது. இந்த இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் சாலை அமைப்பது சிரமமான காரியம், அதிலும் வன விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சாலை வசதிகள் பெரிய அளவில் அமைக்கப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக பல மலைகளை கடந்து அப்பகுதி மக்கள் நடந்தே எந்தவித அவசர தேவைக்கும் செல்லும் நிலை உள்ளது. அந்த வகையில் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனை செல்ல முடியாமல் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலைக்கிராமங்களில் சாலை வசதிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி வெள்ளகவி ஊராட்சி .மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மலை கிராமம் ஆகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு சின்னூர், பெரியூர்,சின்னூர் காலனி என மொத்தம் ஐந்து கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல மஞ்சளாறு அணை வழியாகத்தான் செல்ல முடியும். சுமார் 15 கிலோ மீட்டர் ஒத்தையடி பாதை வழியாக சென்றால் தான் வெளியூர்களுக்கு செல்ல முடியும். 

எனவே இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென்று கேட்டு இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாத நபர்களை டோலி கட்டி தூக்கி சுமந்து நடந்து வந்து பெரியகுளம் கொண்டு வர வேண்டிய அவல நிலை உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நபர்கள் உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை (33)என்ற பெண்ணிற்கு நேற்று திடீரென இரத்த அழுத்தம் குறைந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார்.

உடல் நிலை பாதிப்பு- டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்

அங்கு அடிப்படை மருத்துவத்திற்கு கூட வழியில்லாத நிலையில் அங்குள்ள மலைக்கிராம மக்கள் டோலி கட்டி பாதிக்கப்பட்ட மணிமேகலையை இரவு நேரத்தில் மலைகளை கடந்து தூக்கி சுமந்து வந்தனர். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை வழியாக சுமார் 12 கிலோமீட்டர் தூரம் தூக்கி சுமந்து வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரது உடல்நிலையை பரிசோதித் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இறந்தவர் உடலை மீண்டும் பல கிலோ மீட்டர் தூக்கி சுமந்து வெள்ளகெவி மலை கிராமத்திற்கு சுமந்து செல்வது இயலாத காரியம் என்பதால், பெரியகுளம் நகராட்சி மின் மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான பணிகளை தற்போது அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.