திருப்புவனத்தில் இளைஞர் அஜித் குமார் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர்கள் தப்பி ஓடி என்கவுண்டர் செய்யப்படுவார்களா என திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் தப்பி ஓடியதால் என்கவுண்டர் செய்யப்படுவார்களா? என திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருப்புவனத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் மரணம் அடைந்தது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி, இளைஞர், 27 வயதே ஆன அஜித் குமார் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததிருப்பது மிக மிகக் கண்டனத்துக்கு உரியது. காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித் குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கிறார்கள் இந்த மனித பிண்டங்கள்.

இப்படி தான் விசாரிக்க வேண்டுமா?

ஒரு திருட்டு வழக்கை இப்படி தான் விசாரிக்க வேண்டுமா என்ன? மனித உயிரின் மீது அக்கறை இல்லாத, குரூரபுத்தி கொண்ட தமிழக காவல்துறையை சேர்ந்த இவர்களைக் கைது செய்து உத்தரவிட்டிருக்கிறது அரசு. கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணை என்கிற பெயரில் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? அல்லது தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்யப்படுவார்களா? சாமானியனுக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா?

எப்படி பார்த்தாலும் விசாரணை என்கிற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது. காவல்துறை அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோ காட்சியைப் பார்த்தால் திருட்டு வழக்கிற்கு இப்படிதான் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்கிற ரீதியில் ரத்தம் உறைந்து போகிறது.

காவல்துறை மீது மட்டும் ஏன் இந்த மென்மை போக்கு?

தளபதியின் பொற்கால ஆட்சியில் மக்கள் பணியே மகேசன் பணி என்று ஒவ்வொரு மாவட்டமும் நடந்தே சென்று மக்களைச் சந்தித்து அவர்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறார் நம் முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள். காவல்துறையினர் மீது FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

கட்சியில் யாரும் தவறு செய்தால் பல வருடம் நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் காவல்துறை மீது மட்டும் ஏன் இந்த மென்மை போக்கு? இவர்கள் உடனடியாகக் கட்டாயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்த மிருகங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

DGP சார், இந்த காவலர்கள் எந்த கழிவறை வழுக்குமோ அங்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் அல்லது எங்கு தப்பித்து செல்ல வசதியாக இருக்குமோ அங்கு சென்று விசாரிக்கபடவேண்டும் கண்ட நாதாரிகள் எங்கள் தலைவரை வைத்து video போடுறான் comments போடுறான். கஷ்டப்பட்டு கட்சிகாரன் உழைப்பான். நீங்க 5 நிமிடத்தில் பெயரைக் கெடுத்துருவீங்க.. நல்லா இருக்கு கதை…"

இவ்வாறு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியிருக்கிறார்.