மருத்துவ பொது கலந்தாய்வை மத்திய அரசு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 100% பொது கலந்தாய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 15% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார செவைகளுக்கான தலைமை இயக்குனரகம் ஆன்லைனில் நடத்துகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
இந்த முறையை மாற்றிவிட்டு, அனைத்து இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் மூலம் பொது கலந்தாய்வை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு மீண்டும் பொது கலந்தாய்வு நடத்த முடிவு செய்து முன்மொழிவை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்காதீர்கள்: ஸ்டாலினை சாடும் அண்ணாமலை!
இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான பொது கலந்தாய்வை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் 187-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் “ மருத்துவ படிப்புக்கு பொது கலந்தாய்வு என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
இதுமட்டும் நடந்தால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வரும். உதாரணமாக உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் முதல் இடத்தை பிடித்து, அவர் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தால், நமது தமிழக மாணவர்களுக்கு அந்த இடம் கிடைக்காது. இவ்வாறு நடந்தால் தமிழகத்தில் மருத்துவக் கல்வி என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல் பெயரில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதப்பட்டது. அதற்கு நடப்பு கல்வியாண்டில் பொது கலந்தாய்வு இல்லை என்று பதில் அளித்தனர்.
ஆனால் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான பொது கலந்தாய்வை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி வழங்க மாட்டார். எவ்வளவு சிரமப்பட்டாலும், எவ்வளவு போராடினாலும் பொது கலந்தாய்வுக்கு அனுமதி வழங்க மாட்டோம். மருத்துவ கல்வியை பொறுத்தவரை தமிழ்நாடு, நாட்டிற்கே முன்னோடியாக சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்வதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவோம்..” என்று தெரிவித்தார்.
