Asianet News TamilAsianet News Tamil

உள்நோக்கம் ஏதுமில்லை; இனி அந்த தவறு நடக்காது - திருமாவளவன் விளக்கம்!

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்

VCK Leader thirumavalavan explains about his stand on physically challenged persons
Author
First Published Jul 3, 2023, 1:45 PM IST

மதுரை மாவட்டம், மேலவளவில், கடந்த 30ஆம் தேதி நடந்த மேலவளவு நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, திருமாவளவனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் தொடர்பான பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஜூன் 30 அன்று மேலவளவில் நடந்த "மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்"  நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன.  அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.

மதுரை ஐ.டி. நிறுவனத்தில் அண்ணாமலை மனைவி மறைமுக பங்குதாரர்? பரபரப்பு குற்றச்சாட்டு!

மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.

 

 

என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில், நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன்.

இனி அவ்வாறு நிகழாவண்ணம்  பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன்.  மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios