திருச்சி பீமநகரில் ரியல் எஸ்டேட் கமிஷன் தகராறு காரணமாக தாமரைச்செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று, ஒரு காவலரின் வீட்டு சமையலறைக்குள் வைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. 

திருச்சி பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (24). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல் இன்று காலையில் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்சிங்பேடை பகுதி வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தாமரைச் செல்வனின் இரு சக்கர வாகனத்தை திடீரென வழிமறித்து மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி தாமரைச்செல்வன் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் வெட்ட முயன்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாமரைச் செல்வன் காப்பாத்துங்க காப்பாத்துங்க அலறி கத்தியபடி காவலர் குடியிருப்புக்குள் சென்றால் உயிர் பிழைத்து விடலாம் என சென்றுள்ளார். எனினும் அந்த கும்பல் விடாமல் துரத்தி வந்தனர்.

இரவு பணியை முடித்துவிட்டு வீட்டில் உள்ள தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்ல போக்குவரத்து காவலர் செல்வராஜ் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது தாமரைச்செல்வன் காவலர் செல்வராஜ் வீட்டில் சமையல் அறைக்குள் நுழைந்துள்ளார். ஆனால் வெறி கொண்ட கும்பல் அவரை விடாமல் சமையல் அறையில் வைத்தே சரமாரியாக வெட்டி விட்டு படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து கண்டு அதிர்ச்சி அடைந்த காவலரின் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்துள்ளனர். ஆனால், இதில் சக காவலர்களிடம் ஒருவர் மட்டும் சிக்கினார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலக்கரை போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை நடந்த சில நேரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் நிறுவன பணியாளர் தாமரைச்செல்வனுக்கும் சதீஷ் என்பவருக்கும் கமிஷன் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. அப்போது சதீஷை தாமரைச்செல்வன் அடித்து அவமானம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ் தனது நண்பர்களான பிரகாகரன், நந்து, கணேசன், இளமாறன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.