உயிருக்கு போராடும் யானை..! டிரோன் மூலம் தேடும் வனத்துறை... மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க திட்டம்
ஆனைகட்டி அருகே உணவு உட்கொள்ள முடியாமல் உயிருக்கு போராடிய யானை திடீரென மாயமானதால் தமிழக வனத்துறையினர் 3வது நாளாக காட்டு யானையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உயிருக்கு போராடும் காட்டு யானை
தமிழக கேரள எல்லை கொடுங்கரை பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாயில் காயத்துடன் காணப்பட்டது. கொடுங்கரை ஆற்றின் நடுவே யானை நின்று கொண்டிருந்தது. யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டது. அதே சமயம் கேரளா வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும், தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து காயத்தோடு உள்ள அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக வனத்துறை முடிவு செய்தது. ஆனால் அந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனையடுத்து காட்டு யானையை தேடும் பணி நேற்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசப்பிரமணியன் தலைமையில் 7 குழுக்களும் கேரள வனத்துறை சார்பில் நான்கு குழு அமைக்கப்பட்டு காயமடைந்த காட்டு யானை தேடி வந்தனர்.
லோனும் இல்லை, வீடும் கிடைக்கவில்லை..! முதலமைச்சர் வழங்கிய செக்கை காட்டி வேதனைப்படும் நரிக்குறவ பெண்
மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை
இந்த நிலையில் நேற்று மாலை செங்குட்டை குட்டை காடு பகுதியில் வனத்துறை அதிகாரிகள் அந்த காயம் அடைந்த யானையை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அந்த யானையின் நடமாட்டம் குறித்து தற்போது கண்காணித்து வருகின்றனர். அந்த காட்டு யானை சமதள பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை கொடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயம் அடைந்த யானைக்கு பாதுகாப்புக்காக டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து கலிம் கும்கி யானையும் முத்து (அரிசிராஜா) என்கின்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை மருத்துவர் சுகுமார், ஆனைமலை பகுதியில் இருந்து விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து சதாசிவம் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த அடிபட்ட யானை நீலாம்பதி - ஊக்கையினூர் மலை பகுதியில் இருக்கலாம் என கருதி வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர். சுமார் 11 மணியளவில் அந்த யானை தென்படலாம் என தெரிகிறது. அடிபட்ட யானையை கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
தமிழகத்திற்கு மிக அருகில் நிற்கும் சீன உளவு கப்பல்.! ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு