அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாகவும், போலீஸ் காவல் விசாரணையின் போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பாசமுத்திரம், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமாரின் புகாரின் அடிப்படையில், பல்வீர் சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிற காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், சிறார் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி போலீஸார் முதல் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்பின்னர், பிற பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் பிற காவலர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை; குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

பாலஸ்தீன சார்பு போராட்டங்களுக்கு நிதியளிக்கும் நெவில் ராய் சிங்கம்!

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், பல்வீர் சிங் குற்ற நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்; வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமுதா ஐ.ஏ.எஸ்., விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.