ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் 14.12.2024 அன்று காலமானார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வில் நீண்ட அனுபவம் கொண்ட அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசு இரங்கல் தெரிவித்து, அரசு மரியாதை அறிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் காலமானார்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று உடல்நிலையில் பின்னடைவை சந்தித்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சென்னையில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத் சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் 14.12.2024 அன்று இயற்கை எய்தினார்.

மத்திய அமைச்சராக ஈவிகேஎஸ்

கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004- நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்.தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார்.

அரசு மரியாதையோடு பிரியாவிடை

அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.