தமிழ்நாடு நாள் : இன்று அனைத்து மாவட்டங்களிலும்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஜூலை 18-ம் நாளான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ‘தமிழ்நாடு நாள்’ குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு குறித்த எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை எடுத்து செல்வார்கள். அதே போது ‘ தமிழ்நாடு நாள்’ முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
18.07.2023 முதல் 23.07.2023 வரை அனைத்த் மாவட்ட தலைநகரங்களிலும் இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறும். அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.
சென்னை மாநில கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு தமிழ்த்தாய் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் “ வளர்க தமிழ்நாடு” என்ற தலைப்பில் சுப. வீரபாண்டியன், “ வாழ்க தமிழ்நாடு” எனும் தலைப்பில் முனைவர் மா. ராசேந்திரன், “ எழுக தமிழ்நாடு” எனும் தலைப்பில் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புக்களை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. எனவெ, மாணவ, மாணவியர், பொதுமக்கள் அனைவரும் ” தமிழ்நாடு நாள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! தமிழ்நாடு தின வாழ்த்து செய்திகள் இதோ..