மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் படகை சூழ்ந்த 3 பைபர் படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் ஏறி 800 கிலோ மீன்பிடிவலை, 2 செல்போன், திசை காட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட ஜந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
தமிழக மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க சென்றாலே பல வகையில் பிரச்சனை ஏற்படுகிறது. இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் கைது சம்பவம் ஒருபக்கம், இயற்கை சீற்றம் மறு பக்கம் என தங்களது வாழ்க்கையை கடினமான சூழலில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு தற்போது நடைபெற்ற புதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியை சேர்ந்த செந்தில் அரசன், பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க நேற்று மதியம் சென்றுள்ளனர். ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
அப்போது செந்தில்அரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வினோத், மருது ஆகிய மூன்று மீனவர்களும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் அருள்ராஜ், செல்வமணி, தினேஷ் ஆகிய 4 மீனவர்களும் ஆக 7 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு 3 பைபர் படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென தமிழக மீனவர்களின் படகை சூழ்ந்தனர். கத்தி, கம்பி மற்றும் கட்டைகளுடன் மீனவர்களின் படகில் ஏறிய கொள்ளையர்கள், மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். கொள்ளையை தடுக்க முயன்ற மீனவர்களை கம்பி மற்றும் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

தமிழக மீனவர்கள் காயம்
இதனை தொடர்ந்து படகில் இருந்த 800 கிலோ மீன்பிடிவலை, 2 செல்போன், திசை காட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட ஜந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களையும் விரட்டி அடித்துள்ளனர். மீனவர்கள் அவசரம் அவசரமாக ஆற்காட்டுத்துறை கடற்கரைக்கு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கருக்கு 21 தையல் போடப்பட்டுள்ளது. மேலும் பலத்த காயம் அடைந்த மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்
