ஓசூரில் சலூன் கடைக்காரர் 93 அரசுப்பளி மாணவர்களுக்கு இலவசமாக முடித் திருத்தம் செய்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Free Haircuts to 93 Government School Students: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றனர். புதிதாக வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல் நாளே இன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தம்
இந்நிலையில், ஓசூரை சேர்ந்த ஒருவர் வசதியில்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாயில் முடித் திருத்தம் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி அடுத்த ஒசூர் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் G.M சலூன் என்னும் முடி திருத்தக கடை நடத்தி வருபவர் மூர்த்தி. தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான மலைவாழ் மக்களும், ஏழை எளிய மாணவர்கள் உள்ளதை அறிந்த அவர் கடந்த ஆண்டு முதல் தன்னால் முடிந்த உதவியை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செய்திட நினைத்தார்
ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம்
இதனால் தனது சலூன் கடையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு 30 பேருக்கு இலவசமாக முடி திருத்தினார். இந்தாண்டு தொழிலில் லாபம் கிடைக்கும் முக்கிய நாட்களில் ஒன்றான ஞாயிற்றுக்கிழமை யான நேற்று அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டிங் செய்ய கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே என அறிவிப்பு வெளியிட்டு முடி திருத்தினார்.
சலூன் கடை மூர்த்திக்கு குவியும் பாராட்டு
காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை 93 மாணவர்களுக்கு முடி திருத்தியதாக கூறி உள்ளார். சமூகம் நமக்கு என்ன செய்தது என்பதை விட சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதை நம்மை நாம் கேட்க வேண்டுமென அறிஞர்கள் கூறும் நிலையில் சலூன் கடை மூர்த்தியின் சமூகத்தின் மீதான அக்கறையின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
