கலைஞரின் கனவை முடித்து வைத்த ஸ்டாலின்..பேரறிவாளனிடம் தொலைப்பேசியில் வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சி வீடியோ..
பேரறிவாளனை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொலைப்பேசியில் வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
ராஜூவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஓப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காததால், ராஜூவ் காந்திகொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மேலும் படிக்க: பேரறிவாளனின் வருங்காலம் தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும்.. வாழ்த்து சொன்ன சீமான் !
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் போது, மத்திய மற்றும் மாநில அரசு தங்களது வாதங்களை முன்வைத்தனர். மேலும் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தன. பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 31 ஆண்டுகளாக ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது. 161-வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது. முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.
மேலும் படிக்க: Perarivalan released :சொன்னோம்.. செய்தோம்.. பேரறிவாளன் விடுதலை குறித்து பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின்..
உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.
இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று உள்ளனர். பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தனது மகன் பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். மேலும் நியாமும் , உண்மையும் எங்கள் பக்கம் இருந்ததால் வெல்ல முடிந்தது என்று பேரறிவாளன் கூறினார்.
இதனிடயே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் மாநில சுயாட்சியும் கூட்டாட்சி தத்துவதும் காக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளனை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொலைப்பேசியில் வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க: Perarivalan Case: பேரறிவாளன் விடுதலை சாத்தியமானது எப்படி..! உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.. முழு விவரம்..