Asianet News TamilAsianet News Tamil

Perarivalan released :சொன்னோம்.. செய்தோம்.. பேரறிவாளன் விடுதலை குறித்து பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின்..

தமிழ்நாடு அரசின்‌ வழக்கறிஞர்‌ வைத்த வாதம்‌, மாநில உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்திருந்தது. அதுவே இறுதித்‌ தீர்ப்பாக வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

Tamilnadu CM MK Stalin Statement on Perarivalan release case
Author
Tamilnádu, First Published May 18, 2022, 12:56 PM IST

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 32 ஆண்டுகளாகச்‌ சிறையில்‌ இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்‌. இது நீதி - சட்டம்‌ - அரசியல்‌ - நிர்வாகவியல்‌ வரலாற்றில்‌ இடம்பெறத்‌ தக்க தீர்ப்பு.. தமிழ்நாடு அரசின்‌ வாதங்களை முழுமையாக ஏற்று இந்த
இறுதித்‌ தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதியரசர்கள்‌ எல்‌.நாகேஸ்வரராவ்‌, பி.ஆர்‌.கவாய்‌, போபண்ணா அடங்கிய அமர்வு, முதலில்‌ பேரறிவாளனை பிணையில்‌ விடுதலை செய்தது. இப்போது முழுமையான விடுதலையை வழங்கி உள்ளது. இப்படி விடுவிப்பதற்கு முன்னதாக நடந்த விசாரணையின்‌ போது தமிழ்நாடு அரசின்‌ வழக்கறிஞர்‌ வைத்த வாதம்‌, மாநில உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்திருந்தது. அதுவே இறுதித்‌ தீர்ப்பாக வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மேலும் படிக்க:SC Perarivalan released Updates: விடுதலை கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட அற்புதம்மாள்..பாசப்போராட்டம் வென்ற தருணம்

மனிதாபிமான - மனித உரிமை அடிப்படையில்‌ பேரறிவாளன்‌ விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும்.
அதே நிலையில்‌ - மாநிலத்தின்‌ உரிமையானது இந்தத்‌ தீர்ப்பின்‌ மூலமாக மிகக்‌ கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது.
இது இந்த வழக்கின்‌ மற்றொரு மாபெரும்‌ பரிமாணம்‌ ஆகும்‌. 'மாநில அரசின்‌ கொள்கை முடிவில்‌ ஆளுநர்‌ தலையிட அதிகாரம்‌ இல்லை' என்று  நீதியரசர்கள்‌ சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்‌. 

'ஆளுநர்‌ செயல்படாத நேரத்தில்‌ நீதிமன்றம்‌ தலையிடும்‌' என்று சொல்லி இருக்கிறார்கள்‌ நீதிபதிகள்‌. 'இந்த விவகாரத்தில்‌ மத்திய அரசிடம்‌ கேட்கத்‌ தேவையில்லை' என்பதையும்‌ தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்‌ நீதியரசர்கள்‌.இதன்‌ மூலமாக மாநில அரசின்‌ அரசியல்‌, கொள்கை முடிவுகளில்‌ தனது அதிகார எல்லைகளைத்‌ தாண்டி ஆளுநர்கள்‌ தலையிட அதிகாரம்‌ இல்லை என்பது மேலும்‌
மேலும்‌ உறுதி ஆகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசால்‌, இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித்‌ தத்துவத்துக்குக்‌ கிடைத்த மாபெரும்‌ வெற்றியாகும்‌.அந்த வகையில்‌ மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள்‌ அனைத்துக்கும்‌ இறுதி வெற்றி கிடைத்துள்ளது.

முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக்‌ கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர்‌ இன்று விடுதலைக்‌ காற்றை சுவாசிக்க இருக்கிறார்‌. தன்‌ மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக்‌ களைந்திட எந்த எல்லை வரை சென்றும்‌ போராடத்‌ தயங்காத அற்புதம்மாள்‌ தாய்மையின்‌ இலக்கணம்‌. பெண்மையின்‌ திண்மையை அவர்‌ நிரூபித்துக்‌ காட்டி இருக்கிறார்‌. சட்டத்தின்‌ ஷரத்துகளை வெல்லும்‌ திறன்‌, ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக்‌ காலம்‌ காட்டி இருக்கிறது. 

பேரறிவாளன்‌ என்ற தனிமனிதனின்‌ விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாட்சித்‌ தத்துவத்துக்கும்‌, மாநில சுயாட்சி மாண்புக்கும்‌ இலக்கணமாகவும்‌ அமைந்துவிட்ட இத்தீர்ப்பு மீண்டும்‌ மீண்டும்‌ வரலாற்றில்‌ நினைவுகூரத்தக்கது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரே ஒரு அரசாணை போதும்..! மீதமுள்ள 6 பேரும் அரை மணி நேரத்தில் விடுதலை..? மூத்த வழக்கறிஞர் கூறும் அதிரடி தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios