தமிழ்நாட்டில் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் 3.16% மின்கட்டண உயர்வு. வீடுகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு உயர்வு இல்லை, அரசு ஈடுசெய்யும்.
தமிழ்நாட்டில் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 3.16 சதவீதத்திற்கு மிகாமல் உயர்த்தப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சிறு வணிகர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு பெரிய தொழில் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.” என்றார்.
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை:
"வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும், அதனை அரசே ஏற்கும். இதேபோன்று, சிறு, குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும். புதிய மின் கட்டண உயர்வு நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும்." என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு, பெரும் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டண உயர்வு இருக்கும் என்பதையும், வீடுகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு இந்த கட்டண உயர்வு அரசின் மூலம் ஈடுசெய்யப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
