தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப் போகிறது என தகவல் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Are Electricity Tariffs Increasing In Tamil Nadu?: தமிழ்நாட்டில் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வந்தன. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடைசியாக 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின் கட்டணம் உயரப் போவதாக பரவிய தகவல்

கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின. இதனால் மின் கட்டண உயர்வு இருக்குமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர்.

மின் கட்டண உயர்வு இல்லை

இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயராது என்றும் இது தொடர்பாக வரும் தகவல்கள் தவறானவை எனவும் அமைச்சர் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே 20.05.2025 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வதந்திகள் பரவுகின்றன

எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார வெளியிடப்படவில்லை. ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

மின் சலுகைகளும் தொடரும்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.