தென்காசி ஆலங்குளம் அருகே கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், மணிகண்டன் என்ற பனை ஏறும் தொழிலாளியை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் போராட்டத்தை தூண்டியது. 

கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல்துறை பனையேறுபவர்களிடம் வீரத்தை காட்டியுள்ளனர் என தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் விவசாயத்துடன்யேறும் தொழிலும் செய்து வருகிறார். இதற்கிடையில் ஆலங்குளம் போலீசாருக்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு பனை மரத்தில் பதநீர் எடுப்பதற்காக கணையம் வைத்துள்ளதை இசக்கி ராஜா அறிந்தார். உடனே மரத்தின் உரிமையாளரான மணிகண்டன் மற்றும் அவரின் தந்தை பெருமாள் சேட்டையும் அழைத்துக் கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றபோது, மணிகண்டனின் சகோதரரான சிவன் பொன்ராஜ் குளிக்க சென்றார்.

காவல்துறையினர் மணிகண்டனையும், பெருமாள் சேட்டுவிடம் விசாரணை நடத்துவது குறித்து சிவன் பொன்ராஜ் என்னவென்று விசாரித்தார். . அப்போது உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சாதியை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியபடி மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க வற்புருத்தியுள்ளார். இதற்கிடையே காவல்துறையினருக்கும், மணிகண்டன் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி ராஜா துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டுள்ளார். நான்கு முறை சுட்டதில் இரண்டு தோட்டாக்கள் மணிகண்டன் காலில் பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ஆகியோர் மணிகண்டனை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று இரவு ஆலங்குளம் முக்கூடல் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய உதவி ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் துணை கண்காணிப் பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

காவல்துறையினர் ஆர்பாட்டம் செய்தவர்களின் வேண்டுகோளை புறம்தள்ளியதால் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மணிகண்டனுக்கு நீதிவழங்க கோரி பொதுமக்களுடன் நள்ளிரவுவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் விழித்துக்கொண்ட தென்காசி வருவாய் கோட்டாட்சியர் வைஷ்ணவி பால் விசாரணை மேற்கொண்டு, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, மற்றும் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

கள் இறக்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிக்க சென்ற காவல்துறையினர் திடீரென துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிகார போதையில் திளைக்கும் காவல்துறையினர் சாத்தான் குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல்துறை பனையேறுபவர்களிடம் வீரத்தை காட்டியுள்ளனர். அப்படியே வாதத்திற்கு கள் விற்பனை செய்வதாக வைத்துக்கொள்வோம். அதற்கு துப்பாக்கியால் சுடுவீர்களா? எளியோரிடம் காட்டுவது வீரமல்ல. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்தது மட்டும் போதாது. துறைரீதியாக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்