ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை சர்ச்சையாக பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளன. SIR என்னும் பெயரில் மத்திய பாஜக அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. அதே வேளையில் பாஜக கூட்டணியில் உள்ள திமுக SIR ஐ வரவேற்றுள்ளது. இதற்கிடையே தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து மாலை முரசு சேனலில் விவாதம் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை சத்யன் சர்ச்சை பேச்சு

இதில் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கலந்து கொண்டு பேசினார். SIR க்கு ஆதரவாக‌ பேசிய அவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை அவதூறாக பேசினார். அவரது பேச்சுக்கு அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கடும் கண்டனம் எழுந்ததால் கோவை சத்யன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

இந்நிலையில், கோவை சத்யன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான முயற்சி எடுத்து வருகிறது.

கோவை சத்யன் பேசியது இதுதான்

தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் 29.10.2025 அன்று இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற கோவை சத்யன், அ.இ.அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் மற்றும் ஐ.டி.விங் பொறுப்பாளர் "வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையல்ல.

அரசு எப்போதெல்லாம் சட்டத்தை கொண்டு வருகிறதோ அப்போதெல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நாங்கள் ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுகிறார்கள்” என்று பேசினார்.

கோவை சத்யன் மேற்படி தொலைக்காட்சி பொதுவழி விவாதத்தின்போது பேசியது நம் நாட்டில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருக்கிறது. அவரது பேச்சு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றாகும்.

சட்ட நடவடிக்கை

அதனால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன், துணைத் தலைவர், எழுத்தாளர் இமையம் (வெ.அண்ணாமலை), உறுப்பினர் மு.பொன்தோஸ் ஆகியோரை கொண்ட இவ்வாணையத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து கோவை சத்யன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது.

காவல்துறைக்கு உத்தரவு

அதன்படி, மாலை முரசு தொலைக்காட்சி அமைந்துள்ள சரகத்தின் காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட திரு.கோவை சத்யன் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தினை அறிக்கையாக இவ்வாணையத்திற்கு 10.11.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.