தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
![North east monsoon Low pressure area to form heavy rain for nest 7 days in tamilnadu says chennai meteorological department smp North east monsoon Low pressure area to form heavy rain for nest 7 days in tamilnadu says chennai meteorological department smp](https://static-ai.asianetnews.com/images/01hf5tj72y7h2c6znqqx1wsr23/tamilnadu-rains_363x203xt.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரவு, பகலாக விடாமலை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆனாலும், இயல்பை விட இதுவரை குறைவான அளவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அதிகளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நவம்பர் 26ஆம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ஆம் தேதியன்று (நாளை) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 25ஆம் தேதி (நாளை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.